சென்னை: பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்டெக் பயோடெக்னாலஜி, எம்டெக் கம்ப்யூட்டஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பாடப்பிரிவுகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் இரு பாடப் பிரிவுகளுக்கும் எந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடத்துவது என குழப்பம் ஏற்பட்டதால், மாணவர் சேர்க்கை ரத்தானது.

மத்திய அரசின் 49.5 சதவிகித இடஒதுக்கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், 49.5 சதவிகிதம் இடஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டது.

49.5% இட ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடும் வருவதால், அதில் விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.

எம்டெக் பயோடெக்னாலஜி பிரிவில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எம்டெக் கம்ப்யூட்டஷனல் டெக்னாலஜி பிரிவில் தகுதியான EWS பிரிவினர் இல்லாததால், இடங்கள் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறி உள்ளது.