மன்னார்குடி:

டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் இடையேயான மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

இந்நிலையில் மன்னார்குடியில் திவாகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது. அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தை தினகரன் துவங்கியதை நாங்கள் ஏற்கவில்லை. இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன். தினகரன் குடும்ப உறுப்பினர்களுக்காக கட்சியை தொடங்கியுள்ளார்.

கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நானும் எனது மகனும் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைய உள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். முதல்வர் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வெற்றிவேல், செந்தில்பாலாஜி ஆகியோர் இடையில் வந்தவர்கள்.

அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். தேவைப்பட்டால் தேர்தலில் தனித்து நிற்போம். அதிமுகவின் சுவடே இருக்க கூடாது என தினகரன் நினைக்கிறார். திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது’’ என்றார்.