சென்னை:
மாஸ்க் அணியாவிட்டால் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என சென்னை மாநகராட்சி புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது.
தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், சென்னை மாநகராட்சி சில விதிகளைப் பட்டியலிட்டுள்ளது.

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க விதிமுறைகள்

  • 200 கார்டுகளை மேல் உள்ள கடைகளை பிரிக்க வேண்டும்.
  • கடைகளில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை செய்ய வேண்டும்.
  • டோக்கனில் குறிப்பிட்டு உள்ள நாள், நேரத்தில் மட்டுமே பொருட்களை வழங்க வேண்டும்.
  • கடைக்கு வரும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
  • முகக்கவசம் அணியாத பட்சத்தில்  வழங்கப்படமாட்டாது என அறிவுறுத்த வேண்டும்.

தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள்

  • கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலையில் உள்ளிட்ட இடங்களில் தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
  • அனைத்து பணியாளர்களும் முகக்கவசம், கையுறை, முகக்கவச கண்ணாடி அணிய வேண்டும்.
  • தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்தி தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

வங்கி பணிகள் 

  • வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • டோக்கன் முறை, சரியாக பின்பற்றப் பட வேண்டும்.ஒரு நேரத்தில் வங்கியினுள்  5 வாடிக்கையாளர்களுக்கு மேல் இருக்க கூடாது.
  • பாஸ் புக் பதிவு, குறைந்த அளவிலான பண பரிவர்த்தனை உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.
  • ஏடிஎம் மையங்களில் தேவையான பணத்தை நிரப்பி, மக்கள் வங்கிகளுக்கு கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.  ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு 5 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு சென்று பணத்தை வழங்க வேண்டும்.
  • வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்கள் பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.