சென்னை:

“தமிழகம் முழுவதும் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப் போவதில்லை”.
என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் காவல்துறையினரின் அடாவடி போக்கினால் பலர் கடுமையாக பாதிக்கப்படுவதும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரும் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர்  பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 1.5லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா பேரிடர் காலமான தற்போது மக்களுக்கு பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தகுந்த பாதுகாப்போடு பால் விநியோகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என அறிவித்துள்ள நிலையில் பால் விநியோகம் ஈடுபட்டு பால் முகவர்களை பால் விநியோகம் செய்ய விடாமல் வாகனங்களை பறிமுதல் செய்வது, பால் விநியோக மையங்களை, பால் விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது என பல இடையூறுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக முதல்வர், பால்வளத்துறை அமைச்சர், காவல்துறை தலைவர், ஆணை யாளர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் இருக்கிறது.

எனவே நாளை முதல் காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசர முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவல்துறையினரால் ஏற்படும் பிரச்சினை களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை கடைநிலை காவலர்கள் தொடங்கி உயரதிகாரிகள் வரை எவரது வீடுகளுக்கும் பால் விநியோகம் செய்யப் போவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.