டெல்லி:

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்படுவதாக விமர்சனம் செய்வது தவறானது என்றும்  தேசிய சிறுபான்மை நல ஆணைய துணைத் தலைவர் ஜார்ஜ் குரியன் தெரிவித்தார்.

தமிழகம் வருகை தந்துள்ள தேசிய சிறுபான்மை ஆணையத்தின் துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன், புதுக் கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நாடு முழுவதும்,  சிறுபான்மை பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு பெண்களுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. இருந்தாலும், சில அமைப்புகளால், பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த  விமர்சனம் தவறானது. நாட்டில் சிறுபான்மையின மக்களை பாதிக்கச் செய்யும் அளவுக்கு பாஜக ஒன்றும் நோயாளி கட்சி அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை ஐஐடி மாணவி  பாத்திமா தற்கொலை விவகாரத்தை, கல்லூரி மாணவி என்ற அடிப்படை யிலும், மனிதாபிமான அடிப்படையிலும் பார்க்க வேண்டுமே தவிர, சிறுபாண்மையின மாணவி என்ற கோணத்தில் பார்க்கப்படுவது தவறானது, இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது தவறானது.

இவ்வாறு அவர் கூறினார்.