பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தும் அவசியம் எழவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில எல்லைகளில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொற்று பாதிப்பு கட்டுக்குள் தான் இருக்கிறது. எனவே மீண்டும் லாக் டவுனை அமல்படுத்துவதற்கான திட்டம் ஏதும் மாநில அரசிடம் இல்லை. ஆனாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார்.