புதுடில்லி: பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளார் அந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையின் அளவை கடுமையாக அதிகரித்து உத்தரவிட்டது எஸ்பிஐ. இது கடும் சர்ச்சைகளை கிளப்பியது.

எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்குகளை வாடிக்கையாளர்கள் பராமரித்து வருகின்றனர். இது பெருநகரங்களில் ரூ.5 ஆயிரமாகவும், மற்ற பகுதிகளில் ரூ.3 ஆயிரமாகவும் இருந்தது. குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் தொடர்ச்சியாக அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அந்த வங்கியின் தலைவர் ரஜ்னீஸ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், “வாடிக்கையாளர்கள் இனிமேல் குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.

இதன்மூலம் 44.51 கோடி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். வாடிக்கையாளர்களின் திருப்தியே முக்கியம் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.