சென்னை,

மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்ததன் காரணமாக,  தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங்கை உடனடியாக துவக்கி செப்டம்பர் 4ம்தேதிக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் இல்லை. ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்களிக்க முடியாது. தமிழக அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது. என மத்திய அரசு கூறியதை தொடர்ந்தே சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவை வழங்கியது.

இதன் காரணமாக தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவர் கனவு கலைந்து போனது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்…

தமிழகத்துக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் நளினி சிதம்பரம்

நீட் தேர்வில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் சிறப்பான இடம்பிடித்துள்ளனர் என்றும்,  நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழகத்துக்கு வாய்ப்பு இல்லை என்றும் மருத்துவம் சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் நளினி சிதம்பரம் கூறி உள்ளார்.

இவர்தான் நீட் விலக்குக்கு எதிராகவும்,  தமிழக மாணவர்களுக்கு எதிராகவும்  உச்சநீதி மன்றத்தில் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசை சவுந்தரராஜன்

நீட் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு வரவேற்பு தெரிவிப்பதாக வும்,   எதிர்காலத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எச்.ராஜா

நீட் தேர்வு விவகாரத்தில் தர்மம் வென்றதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து கூறியுள்ளார். நீட் தேர்வில் அதிக மதிபெண் பெற்ற தமிழக மாணவர்களுக்கு எச்.ராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரவீந்திரநாத்

உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பு காரணமாக, மாநில மொழி பாடத்திட்டத்தின்படி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தலைவர் ரவீந்திரநாத் கூறி உள்ளார்.

கல்வியாளர் சோமசுந்தரம்

தமிழக மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் அநீதி இழைத்து விட்டன என்று கல்வியாளர் சோமசுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜிப்மர், எய்ம்ஸ் கல்லூரிகளில் சேர நீட் தேர்வு ஏன் நடத்தப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்

நீட் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக கம்யூனிஸ்டு மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறி உள்ளார்.

கிருஷ்ணசாமி

நீட் விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை மனதார வரவேற்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.