திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே கேரளாவில் தான் முதன்முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் பாராட்டுகளை பெற்றன.
தற்போது கொரோனாவை விரட்டியடிப்பதில் முன்னணி மாநிலமாக கேரளா திகழ்ந்து வருகிறது. இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் கூறி உள்ளது.
கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் குணமாகி உள்ளனர். கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 498 பேரில் 392 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தற்போது கேரளாவின் பல்வேறு மருத்துவமனைகளில் 102 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.