மும்பை:

பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், உடற்கூறு ஆய்வில் அப்படி தெரிவிக்கப்படவில்லை.

துபாயில் நடிகர் மோஹித் மார்வாவின் திருமண நிகழ்ச்சிக்கு ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகளுடன் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

தனது உடல்நலத்தில் மிகவும் அக்கறையுடன் இருந்த  ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்பது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஸ்ரீதேவி  துபாய் நட்சத்திர விடுதி அறையின் குளியலறை தொட்டியில் மயங்கிக் கிடந்ததாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதே நேரம் அவர் மாரடைப்பினால்தான் இறந்தார் என்று அதிகாரப்பூர்வமாக மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அவர் எப்படி இறந்தார் என்ற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.

காவல்துறை மற்றும் தடயவியல் நடைமுறைகள் தொடர்வதால் இதுகுறித்து அவரது குடும்பத்தினரோ, காவல்துறையோ மருத்துவமனை நிர்வாகமோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.