சென்னை:

டைபாதைகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது, மீறி நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாநகரில் நடைப்பாதைகளை முறையாக பராமரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் கடந்த விசாரணையின்போது,  நடைபாதை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசஷாயி அமர்வு மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி ஆணையர்  பிரகாஷ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 40,000 நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கபட்டு இருப்பதாகவும்,  எந்தெந்த பகுதிகளில் முழுநேரம் வியாபாரம், பகுதி நேரம் வியாபரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், ஓராண்டு காலத்திற்குள் இந்த திட்டம் முழுவதுமாக நடைமுறைப் படுத்தபடும் என கூறினார்.

அத்துடன், தி.நகர் பாண்டிபஜாரில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாகன நிறுத்தம் மற்றும் நடைபாதை வியாபாரம் செய்வதை தடுக்க தனியார் நிறுவனத்துடன் 5 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய ஆணையர்,. சென்னையில் 11 லட்சம் நான்கு சக்கர வாகனங்களும், 54 லட்ச இரு சக்கர வாகனங்களும் இருப்பதாகவும், இதற்காக  65 வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

என்எஸ்சி போஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவில் அகற்றப்படுவது குறித்த கேள்விக்கு, அந்தக் கோவில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் இடிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதையடுத்து நீதிபதிகள்,  சென்னை முழுவதும் நடைப்பாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,  தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் சட்டப்படி அவர்களை கணக்கெடுத்து, அதுதொடர்பாகவும் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 18–-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.