புதுடெல்லி: மத்திய அரசு துறைகளின் செயலாளர்களாக இருப்பவர்களின் பின்னணி விபரங்கள் வெளியாகி, சமூக ஆர்வலர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தரவின்படி, மத்திய அரசு துறைகளில் பதவி வகிக்கும் செயலாளர்கள் 89 பேரில் ஒருவர்கூட OBC பிரிவைச் சேர்ந்தவர் இல்லை. மத்திய பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் இந்த தரவை வெளியிட்டுள்ளது.

இந்த 89 பேரில் ஒரேயொருவர் SC பிரிவையும், மூன்று பேர் ST பிரிவையும் சேர்ந்தவர்கள். பெரும்பாலான அரசுத் துறைகளின் செயலாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளே தேர்வு செய்யப்படுகின்றனர்.

செயலாளர் அந்தஸ்தில் இந்த நிலை என்றால், கூடுதல் செயலாளர் அந்தஸ்திலும் நிலைமை படுமோசம்தான். மொத்தமுள்ள 93 கூடுதல் செயலர்களில் 6 பேர் SC பிரிவையும், 5 பேர் ST பிரிவையும் சேர்ந்தவர்கள். ஒருவர்கூட OBC பிரிவைச் சேர்ந்தவர் இல்லை.

அதேபோன்று மொத்தமுள்ள 275 இணைச் செயலாளர்களில், 13 பேர் SC பிரிவையும், 9 பேர் ST பிரிவையும், 19 பேர் OBC பிரிவையும் சேர்ந்தவர்கள்.

எனவே, வலிமைவாய்ந்த பதவிகளில் பெரியளவில் அமர்ந்து கோலோச்சுபவர்கள் யார் என்பதை தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.