திருவனந்தபுரம்

கொரோனா நெருக்கடியில்,  ஊடகத்துறையில் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு போன்றவை கூடாது என கேரள முதல்வர் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த சமூகமே கொரோனாவால் பெரும் ஆபத்தை எதிர் நோக்கி உள்ளது. எனவே நடப்பு நிகழ்வுகளை மக்களுக்கு உணர்த்தும் ஊடகத் துறையில் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு செய்யக் கூடாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “விளம்பரங்கள் குறைந்து போனதால் ஊடகத் துறை இழப்பை சந்தித்து வருகிறது.

பெரும் ஆபத்துக்கு இடையே கொரோனா நிலவரம் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பணிகளை ஊடகத்துறை எதிர்கொண்டு வருகிறது.

எனவே ஆபத்துகளை கடந்து களத்தில் செய்தி சேகரிக்கும் அவர்கள் நம் போற்றுதலுக்கு உரியவர்கள்” எனவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.

சில மாநிலங்களில் செய்தியாளர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கவலையளிப்பதாகக் கூறிய அவர்,  கேரள ஊடகத் துறையினருக்கும் விரைவில் இச்சோதனை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.