லகிலேயே மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை குஜராத்தின் நர்மதா ஆற்றுப்பகுதியில் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் மாதம் 31ந்தேதி  பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

ஆனால், பட்டேல் சிலை அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நிர்வகித்து வரும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுதந்திரபோராட்ட வீரரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் வதோதரா அருகே 182 மீட்டர் உயரத்தில் சுமார் 3ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உலகிலேய உயரமான  சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை காண தினசரி ஏராளமான சுற்றுப்பயணிகள் குவிந்து வருகின்றன. இதை குஜராத் மாநில அரசும் உறுதி செய்துள்ளது. ஆனால், இந்த சிலை மற்றும் அதை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பூங்காக்கள், கண்காட்சி அரங்கம் போன்றவைகளை பராமரித்து வரும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து சிலையை பராமரித்து ஊழியர்கள் மாநில அரசிடம் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து சிலை அமைக்க தெரிந்த அரசுக்கு, அதை பராமரிப்பவர் களுக்கு சம்பளம் கொடுக்க தயங்குவது ஏன் என்று எதிர்க்கட்சிகள்  கேள்வி எழுப்பி உள்ளன.