கோயம்புத்தூர்: சட்ட அமலாக்க அதிகாரிகள், இதுவரை கோவையில் எந்த தீவிரவாதிகளையும் கண்டறியவில்லை என்று கூறியுள்ளார் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் ஷரன்.

லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகள் இலங்கை வழியாக கோவை நகரில் ஊடுருவியுள்ளார்கள் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அரசு புலனாய்வு அமைப்புகளில் சார்பில் செய்தி பரப்பப்பட்டது.

கோவையில் தங்களின் தளத்தை அமைத்துக்கொள்வதற்காக அவர்கள் ஊடுருவியுள்ளார்கள் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து, மொத்தம் 1500 காவல்துறையினர் கோவையில் களமிறக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்பட்டது.

தற்போது இத்தனை நாட்கள் ஆகியுள்ள நிலையில், கோவையில் தீவிரவாதிகள் யாரும் தேடுதல் வேட்டையில் சிக்கவில்லை என்று மாநகர போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

“எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு தெரியாது. நாங்கள் எங்களின் பணியை செய்துகொண்டிருக்கிறோம்” என்றார் கமிஷனர்.