டெல்லி: வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது முதற்கட்டமாக ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 1.30 கோடிக்கும் அதிகமான முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

மார்ச் 1ம் தேதி முதல் 2ம் கட்டமாக 60 வயதுக்கு அதிகமானோர், 45 வயதுக்கு மேல் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டு விட்டது.

இந் நிலையில், கோ-வின் செயலியில் 2ம் கட்டத்திற்கு ஏற்ப புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளதால் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய 2 நாள்கள் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.