பியாங்யாங்: வடகொரியா அணு ஆயுத பலம் கொண்ட நாடாக இருக்கும் காரணத்தால், இந்த மண்ணில் இனிவரும் காலங்களில் போர் நடக்காது என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.
எதிர்ப்பை மீறி, தொடர்ச்சியாக பல அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டதால், வடகொரியா மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் – கிம் ஜாங் உன் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தும் பலனளிக்காமல் போனது. மேலும், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தத் தொடங்கியது வடகொரியா.
இந்நிலையில், தென்கொரியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் 67வது ஆண்டு தினத்தையொட்டி போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் அதிபர் கிம் ஜாங் உன் பேசினார்.
அப்போது, “எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவே வடகொரியா அணு ஆயுதங்களை தயாரிக்கிறது. தற்போது அணு ஆயுத சக்தியில் பலம் பொருந்திய நாடாக வடகொரியா உள்ளது. நாட்டின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், இனி இந்த மண்ணில் போர் நடக்காது” என்று பேசியுள்ளார் அவர்.