டில்லி:

தாஜ்மகாலை நிர்வகிக்கும்  உரிமையை எந்த அமைப்புக்கும் கொடுக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த 11ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது  தாஜ்மகாலின் உரிமை தொடர்புடைய ஆவனங்களை ஒப்படைக்க  வக்பு வாரியத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு, தாஜ்மகால் உரிமையை எந்தவொரு அமைப்புக்கும் கொடுக்க முடியாது என கூறி உள்ளது.

2005ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் தாஜ்மகாலைத் தங்களுடைய சொத்து எனப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி

2010ம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாஜ்மகாலின் உரிமையை ஷாஜகான் வக்பு வாரியத்துக்கு எழுதிக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

இதையடுத்து ஷாஜகான் எழுதிக்கொடுத்த உரிமைப் பட்டயத்தை நீதிமன்றத்துக்குக் காட்ட வேண்டும் என வக்பு வாரியத்தை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ,   உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது என  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தாஜ்மகாலை பராமரிக்கவும், வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க முடியாது என்றும் விசாரணையின்போது மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஜுலை 27-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.