சென்னை:

ரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை வெளியாட்களுக்கு கொடுக்க தமிழக அரசுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் தோட்டக்காரர், துப்புரவாளர் உள்ளிட்ட பணிகளை நிரப்ப அவுட்சோர்சிங் முறையில் நிரப்பப்பட வேண்டும் என்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து,  கோவையில் செயல்படும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. அதில், தங்கள் கல்லூரியில் காலியாக உள்ள தோட்டக்காரர், காவலர், துப்புரவாளர் உள்ளிட்ட நான்கு பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்ததாகவும், ஆனால், நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்காத கல்வி இயக்குநரகம், வெளியாட்களுக்கு ஒப்பந்தம் வழங்கும்படி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டீ.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங் களுக்கான பணிகளை வெளியாட்களுக்கு ஒப்பந்தம் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உரிமையில்லை எனக் கூறி, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.