சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைய துவங்கியுள்ளதாகவும், இன்னும் ஒரு வாரகாலத்திற்கு மாநிலத்தின் பல இடங்களில் பரவலான மற்றும் மிதமான அளவில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுமைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஏற்கனவே துவங்கியிருந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அது வலுவிழந்து காணப்பட்டது.

மேலும், அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவான புயல்களால், தமிழ்நாட்டிற்கான மழை இதர மாநிலங்களுக்குச் சென்றுவிட்டது. எனவே, வடமாவட்டங்கள் போதிய மழையின்றி விடப்படும் நிலை உருவானது.

ஆனால், ஏமாற்றத்தைப் போக்கும் வகையில், தற்போது மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், நாகை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்புற மாவட்டங்களிலும் அதிக மழைக்கு வாய்ப்புள்ளன. மேலும், வேறுபல மாவட்டங்களிலும் நவம்பர் 30 முதல் இரண்டு நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.