பியோங்யங்:

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், 3வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இவரது மனைவி ரி சொல் ஜூ வெளியில் யார் கண்ணிலும் படாமல் இருந்தார். கடந்த பிப்ரவரியில் இந்த தம்பதிக்கு 3வது குழந்தை பிறந்திருப்பதை தென்கொரியா எம்பி.க்களிடம் தேசிய நுண்ணறிவு பிரிவு தெரியப்படுத்தியதாக யோஹப் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுமார் ஒரு ஆண்டு காலமாக அதிபரின் மனைவி ரி, வெளியில் வருவதை தவிர்த்து வந்தார். இதனால் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என யுகத்தின் அடிப்படையில் அப்போதே செய்திகள் வெளிவந்தன.

வடக்கு ஜப்பான் பகுதியில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ள நிலையில் அதிபருக்கு புதிய குழந்தை பிறந்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தம்பதியருக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதே ஆண்டு முதல் குழந்தை பிறந்துள்ளது. 2013ம் ஆண்டில் 2வது குழந்தை பிறந்துள்ளது.

வட கொரியா அதிபர் பரம்பரையில் கிம் 3வது தலைமுறையாகும். கடந்த 2013ம் ஆண்டு தேசிய கூடைப்ப ந்து சங்க நட்சத்திர வீரர் டென்னிஸ் ரோட்மேன் வடகொரியாவுக்கு சுற்றுப் பயணம் வந்தபோது அதிபருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த தகவல் வெளி உலகிற்கு தெரியவந்தது.

‘‘கிம், தனது பெண் குழந்தையை கையில் வைத்திருந்தார். வட கொரியா அதிபர் ஒரு நல்ல தந்தை. அவருக்கு அருமையான குடும்பம் அமைந்திருக்கிறது’’ என்று ரோட்மேன் தெரிவித்தார். இதன் மூலமே அவருக்கு 2வது குழந்தை பிறந்தது தெரியவந்தது.

அதிபர் கிம் பிறந்த தேதி, திருமண தேதி, மேலும் தனிப்பட்ட தகவல்களை யாராலும் சரியாக உறுதிபடுத்த முடியவில்லை. எனினும் இவர் தனது தந்தை 2ம் கிங் ஜாங்கை விட மிகவும் பிரபலம். அதிபரின் மனைவி சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை ஒரு கல்வியாளர். தாய் டாக்டர் என தென்கொரியாவின் நுண்ணறிவு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.