சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் பெய்துள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக, 4266 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது, இருந்தாலும் 438 ஏரிகள் தண்ணீரே இல்லாமல் காய்ந்து கிடப்பதாகவும்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துளளனர்.

தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 14 ஆயிரத்து 139 பாசன ஏரிகள் உள்ளன.

இதில் 4 ஆயிரத்து 266 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. 

698 ஏரிகள் 91 முதல் 99 சதவீதம் வரை நிரம்பி வருகின்றன.

843 ஏரிகள் 81 முதல் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது.

1,346 ஏரிகள் 71 முதல் 80 சதவீதம் நீர் வந்து உள்ளது.

1,555 ஏரிகள் 51 முதல் 70 சதவீதம் நீர் நிரம்பி வருகிறது.

2 ஆயிரத்து 237 பாசன ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

2 ஆயிரத்து 756 ஏரிகளில் ஒன்று முதல் 25 சதவீதமும்,

438 ஏரிகளில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடப்பதாகவும்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையை பொறுத்தவரையில் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அதேபோல் மாநிலம் முழுவதும் 90 பெரிய மற்றும் சிறிய அளவிலான அணைகள் உள்ளன. இவற்றின் மொத்த கொள்ளளவு 2 லட்சத்து 24 ஆயிரத்து 297 மில்லியன் கன (224.297 டி.எம்.சி.) அடியாகும்.

தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் அணைகளில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 636 மில்லியன் கன அடி (164.636 டி.எம்.சி.) சேமிக்கப்பட்டு உள்ளது.

இருப்பு சதவீதத்தை பார்க்கும் போது 73.40 சதவீதமாகும்.

இதனால் வருகிற கோடைக்காலத்தில் மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

அதேபோல் நிலத்தடி நீரும் எதிர்பார்த்த அளவு உயர்ந்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.