சென்னை,

மிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் ஓரிரு நாளில் பருவமழை தொடங்கும் என கூறிய நிலையில், இன்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடித்தது. அப்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகம் இருக்கும். அப்போது தமிழகத்தில் மழை குறைவாக இருக்கும்.

ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தின்போது இயல்பான அளவை விட 31 சதவீதம் அதிகமாக தமிழகத்தில் பெய்துள்ளது.

இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தமிழகத்தில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து  வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இன்றே தொடங்கி உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கி இருப்பதால்,  தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளனர்.

அதே நேரத்தில் இன்றுகூட ட வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தனர். அதன்படி இன்று தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

மேலும், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வருகிற 27-ந் தேதி (நாளை) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல், 28-ந் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் ஆண்டு மழைபொழிவில் 48 சதவீதம் மழையை தமிழகம் பெறுகிறது. அதாவது, இந்த காலத்தில் தமிழகம் 44 செ.மீ. மழை பெறுகிறது.தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இயல்பான அளவை விட அந்த ஆண்டு 53 சதவீதம் அதிகமாக மழை பெய்தது.

ஆனால் 2016-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை. இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாகவே மழை பெய்தது. இதனால் தமிழகம் அந்த ஆண்டு ஏமாற்றத்தை சந்தித்தது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மக்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.