சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் வரை நீடிக்கிறது. இதன்காரணமாக தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும். அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். வரும் 19ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முடிவுக்கு வரும்.

தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் வரும் 19ஆம் தேதி முதல் விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.