சென்னை: வடகிழக்கு பருவமழை ஜனவரி 12ந்தேதி வரை நீடிக்கும் என்றும் அதன்காரணமாக குளிர்கால நாட்கள் குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வடகடலோரத்தில் லேசான மழையும், தென் கடலோரத்தில் மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை நகரில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை ,மயிலாடுதுறை ,கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஜனவரி 6ந்தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ,கடலூர் ,விழுப்புரம், தேனி ,நீலகிரி ,கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்  தெரிவித்து உள்ளது.

மெலும், நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 12 வரை நீடிக்கும் என்றும், குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 24°C என்ற அளவில் உள்ளது. வழக்கமாக குளிர் காலத்தில் 20°C என்ற அளவில் குறைந்தபட்ச வெப்பநிலை இருக்கும் வடகிழக்கு பருவமழை காலம் நீடிப்பதால், குளிர்கால நாட்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.