சென்னை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் 3 வாரங்களில் (அக்டோபர் மாத இறுதி) தொடங்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.  கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.

மற்ற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக  மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும்  தெரிவித்தார்.

தென்மேற்கு பருவமழை காலகட்டமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் முடிவடைந்த நிலையில்,  இந்த ஆண்டு 97 சென்டிமீட்டர் அளவிலான மழை கிடைத்துள்ளது என்றும், இது  வழக்கத்தை விட 10 சதவீதம் அதிகம் என்றும், இதில்,தமிழகத்திற்கு 34 சென்டிமீட்டர்  கிடைக்க வேண்டியது நிலையில், தற்போது 40 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

சென்னையை பொருத்தவரை 44 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது 59 சென்டிமீட்டர் மழை கிடைத்திருப்பதாக தெரிவித்தவர்,.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூன்று வாரங்களில் தொடங்கு வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் கூறினார்.