டில்லி:

உ.பி. மாநிலம் கோராக்பூர் இடைத் தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி சில பாஜக எம்.பி.க்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சொந்த தொகுதியில் ஏற்பட்ட இந்த தோல்வி சில திமிர் பிடித்த தலைவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது என்று பாஜக.வினர் தெரிவித்துள்ளனர்.

கட்சியின் தேசிய அளவில் முக்கிய பிரச்சார நபராக மாற முயற்சித்த யோகி ஆதித்யநாத்துக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என்று அவரது எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். உ.பி., கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களை சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் சிலரும் இந்த தோல்வியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியில் பல மூத்த தலைவர்களை மீறிய யோகியின் வளர்ச்சி பலரது எதிர்ப்பையும் சம்பாதிக்க உதவியது. இத்தேர்தல் முடிவு, கள நிலவரத்தை அறியாத திமிர் தனம் மற்றும் அதீத நம்பிக்கைக்கு கிடைத்த முடிவு. ‘‘இந்த வெற்றியை உ.பி. பாஜக எம்.பி.க்கள் சிலர் கொண்டாடினர். கட்சியின் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்த ஒரு தொகுதியை இழந்தது முதல்வருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மாநில தலைமைக்கு ஏற்பட்ட தோல்வி கிடையாது’’ என்று மூத்த தலைவர் ஒரு தெரிவித்துள்ளார்.

‘‘யோகியின் இந்த இழப்பு மோடிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷத்ரிய இடத்தில் ஒரு பிராமின் தோற்றது யோகிக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஷாத் வெற்றி மூலம் தலித்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்’’ என்று இந்தி இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘‘இந்த தோல்விக்கு பொறுப்பேற்று குறைந்தபட்சம் முதல்வர் பதவியை யோகி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். பாரம்பரியமாக வெற்றி பெற்று வந்த ஒரு தொகுதியில் தோல்வி அடைந்துள்ளோம். இதில் வெற்றி பெற தவறிவிட்டு எப்படி அதிகாரத்தில் இருக்கலாம்?’’ என்று பாஜக உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘‘சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகாவில் யோகி ஆதித்யநாத்தின் பிரச்சார திட்டத்திலும் இந்த தோல்வி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது பிரச்சார கூட்டங்களுக்கு முன்பை போல் கூட்டம் கூடுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது’’ என்று கர்நாடகா பாஜக உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.