சென்னை:

சென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை என்று திமுக பொருளாளர்  துரைமுருகன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் சென்னைக்கு வேலூரில் இருந்து  இருந்து தண்ணீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என திமுக பொருளாளர் துரைமுருகன் அரசுக்கு மிரட்டல்விடுத்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தான் அப்படி சொல்லவில்லை என்று துரைமுருகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து தண்ணீர் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து வேலூர், ஜோலார்பேட்டை பகுதிகளில் இருந்துரயிலில் தண்ணீர் எடுத்து வரப்படும் என முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார்.

ஆனால், வேலூரில் இருந்து ரெயிலில் சென்னைக்கு நீர் கொண்டு போனால் பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்  என திமுக பொருளாளர் துரைமுருகன் அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகின.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், துரைமுருகன் பேச்சுக்கு பதில் அளித்த  தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம், தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால், கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் சமூக வலைதளங்களிலும் துரைமுருகன் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.

இந்த நிலையில், சென்னைக்கு தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை என்று துரைமுருகன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தி.மு.க. ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களும் – தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், வேலூர் மாவட்டத் திற்கென்று காவேரி தண்ணீரை ஒரு கூட்டுக் குடிநீர் திட்டமாக அறிவித்தார்கள்.

திருப்பத்தூரிலிருந்து அரக்கோணம் வரையில் இருக்கின்ற பல நகரங்களுக்கும் – பல கிராமங்களுக்கும் காவேரி நீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களும் கிடைத்துக் கொண்டிருந்த, அத்தண்ணீரும் தற்பொழுது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கிடைக்கிறது.

இந்த நிலையில், அந்த காவேரி தண்ணீரை மறித்து, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு கொண்டு போவதாக இங்கே பேசிய பலர் தெரிவித்தனர். அப்படி கொண்டு போவது நியாயமும் அல்ல – விவேகமும் அல்ல.

ஜோலார்பேட்டையைத் தவிர, வேறு எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதனை சென்னைக்கு கொண்டு போவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. அதைவிடுத்து, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வினியோகிக்கப்படுகிற, பற்றாக்குறையுடன் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்ற காவேரி நீரை மறித்து, சென்னைக்கு கொண்டு போனால், எங்கள் வேலூர் மாவட்ட மக்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றுதான் நான், இன்று (22-6-2019) காலை, வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.

ஆனால், இப்பேச்சினை சில பத்திரிகைகளும் – ஊடகங்களும், திரித்து ‘ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போவதற்கு துரைமுருகன் எதிர்ப்பு’ என்று தவறாக தலைப்பிட்டு மக்களிடத்தில் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

சென்னையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறவன் நான், சென்னையில் என்ன நடக்கிறது என்று நன்றாகவே தெரியும்.

எனவே, ஒரு தவறான பிரச்சாரத்தை துவக்கி, அதன் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.