தஞ்சை: சசிகலா அதிமுகவுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் எதுவும் ஏற்பட போவதில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறி இருப்பதாவது: சசிகலா முழுமையாக குணம் பெற்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பெங்களூருவில் அதிமுக கொடி கட்டிய காரில் வலம் வந்தது அதிமுகவின் உள்கட்சி பிரச்னை. அது பற்றி நான் கருத்து கூற முடியாது.

அவர் அதிமுகவுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் ஒன்றும் ஏற்பட போவதில்லை. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி கண்டிப்பாக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு 10 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களின் ஒரு கோரிக்கை கூட ஏற்கப்படவில்லை. மாறாக விவசாயிகள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவி இருக்கிறது. இது ஜனநாயக நாடாகத் தெரியவில்லை.

இதே நிலைமை நீடித்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை எழும். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும்.

தமிழகத்தில் ராகுல்காந்தி வருகைக்கு பிறகு காங்கிரசுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அவர் மீண்டும் தமிழகம் வர உள்ளார். எனவே காங்கிரசுக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு தொகுதிகளின் எண்ணிக்கை அமையும் என்று அவர் தெரிவித்தார்.