போபால்;

மத்திய பிரதேசத்தில் வரும் செப்டம்பர் மாதம் முதல் புறநோயாளி துறை தொடங்கப்படுகிறது. இதில் ஜோதிடர்களும், குறி சொல்பவர்களும் நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் திட்டத்தை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அரசு செயல்படுத்தவுள்ளது.

தகுதியான குறி சொல்பவர்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் மகரிஷி பதஞ்சலி சமஸ்கிருத சன்ஸ்தன் (எம்பிஎஸ்எஸ்) அமைப்பின் வழிகாட்டுதல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். வாரத்தின் இறுதி நாட்களில் 3 முதல் 4 மணி நேரம் வரை இரு தினங்கள் இவர்கள் பணியாற்றுவார்கள்.

ஜோதிடர்கள், வாஸ்து நிபுணர்கள், கைரேகை ஜோதிடர்கள், வேதம் தெரிந்தவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவர்கள் நோயாளிகளின் ஜாதகம், ஆயுள் ரேகையை தீவிரமாக ஆராய்வார்கள்.

புறநோயாளிகள் துறையில் ஜூனியர் மருத்துவர்கள் மூத்த மருத்துவர்கள் மேற்பார்வையில் பணியாற்றுவார்கள். இவர்களுக்கு ஜோதிடர்கள் உதவி கரமாக இருக்கும் வகையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று எம்பிஎஸ்எஸ் இயக்குனர் திவாரி தெரிவித்துள்ளார்.