டில்லி

சாமானிய மக்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில் உள்ளதாக  உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

கடந்த மார்ச் 25 முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது   பொது முடக்கத்தால் மக்களில் பலர் வருமானம் இழந்தனர்.  அவர்களால் வங்கிக் கடன்களுக்குத் தவணை செலுத்த இயலாத நிலை உண்டானது.  இதையொட்டி மத்திய ரிசர்வ் வங்கி மாதத் தவணைகளைச் செலுத்தக் கடந்த மாதம் இறுதி  வரை காலக் கெடு அளித்தது.

அதற்குள் தவணைகளைச் செலுத்தாதவர்களின் தொகைக்கான வட்டிக்கும் வட்டியை வசூலிக்கக் கடன் அளித்த நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.   இந்த உத்தரவை எதிர்த்துப் பல வழக்கு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளன.  இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது ரூ. 2 கோடி வரை கடல் வாங்கியவர்களின் வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறையை ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.   ரிசர்வ் வங்கியும் அதை ஏற்றுக்கொண்டது. ஆனால் இதை நடைமுறைப்படுத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு வங்கிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

இதற்கு அமர்வு தற்போதுள்ள இக்கட்டான சூழலில் இவ்வாறு அர்சு கால அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது என அறிவித்துள்ளது.  மேலும் நெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகையைச் சாமானிய மக்கள் கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில் உள்ளது எனவும் மத்திய அரசு இதற்கு மனம் வைத்து இந்த தள்ளுபடி ரத்து செய்வதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.