சென்னை:

திருமணம், மருத்துவ சிகிச்சை, துக்க நிகழ்வுகள் உள்ளிட்ட அவசர பயணங்களுக்கான அனுமதி பெற உங்கள் பகுதி தாசில்தார்களை அணுகலாம் என்றும், அவர்கள் விண்ணப்பம் குறித்து, உரிய காவல்துறை ஆய்வுக்கு பிறகு அனுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

அவசரப் பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள் துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சைக்காக காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அனுமதி பெற்று ஊருக்குச் செல்லலாம் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

இந்நிலையில், அவசரப் பயணத்திற்காக வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை மாநகராட்சி துணை ஆணையரிடம் அனுமதி பெறலாம். அதன்படி, சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிக் கடிதம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று மாவட்டத்திற்குள்ளாக பயணம் மேற்கொள்வோர் தாசில்தாரிடம் அனுமதி பெற்று பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.