ஷில்லாங்:

மேகாலயா மாநில முதல்வராக பாஜக கூட்டணியுடன் தேசிய மக்கள் கட்சித் தலைவர் கன்ராட் சங்மா பதவியேற்றுக் கொண்டார். கவர்னர் மாளிகையில் இன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற்ற பதவி ஏற்புவிழாவின்போது சங்மா தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்டது,

60 உறுப்பினர்களை கொண்ட மேகாலயா மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல்நடந்த நிலையில் கடந்த 3ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.

ஆளும் கட்சியான காங்கிரசுக்கு அதிகபட்சமாக 21 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மறைந்த தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் கன்ராட் சங்மா எம்.பி. தலைமையிலான தேசிய மக்கள் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கட்சி மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ளது.

இந்நிலையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து

இந்நிலையில்  21 உறுப்பினர்களை கொண்ட  காங்கிரஸ் மேகாலயாவில் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால், அது பலனளிக்காத நிலையில்,  தேசிய மக்கள் கட்சியின் தலைமையில் ஐக்கிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பிற சிறிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா முயற்சி செய்தது.

கன்ராட் சங்மா  கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் கங்கா பிரசாத்தை சந்தித்து, தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், எனவே ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறும் உரிமை கோரினார். இதைத்தொடர்ந்து, புதிய அரசு அமைக்க கன்ராட் சங்மாவுக்கு கவர்னர் கங்கா பிரசாத் நேற்று இரவு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, இன்று பாஜக ஆதரவுடன் மேகாலாயா மாநில முதல் மந்திரியாக தேசிய மக்கள் கட்சித்தலைவர் கன்ராட் சங்மா பதவியேற்றுக்கொண்டார்.

ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.