சென்னை: சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

அதே நேரத்தில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் குறித்து சுகாதாரத்துறை ஊழியர்கள் கேட்டறிந்து வருகிறார்கள். எந்த தெருவில் பாதிப்பு அதிகம் வருகிறது என்பதை அறிந்து அந்த பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 800ல் இருந்து 1,106 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 173 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. தேனாம்பேட்டை, அண்ணாநகர்,  ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டு பகுதிகள் உள்ளன.

ஒரே தெருவில் 3 பேருக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்த தெரு அடைக்கப்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.