முட்டை டெண்டர் வரும் 25ந்தேதி வரை நிறுத்தி வைப்பு: உயர்நீதி மன்றம்
சென்னை :
சத்துணவு திட்டத்தில் முட்டை டெண்டர் கொள்முதல் செய்ய தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்துள்ள சென்னை உயர்நீதி மன்றம், வரும் 25ந்தேதி வரை டெண்டரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது.
சத்துணவுக்கு முட்டை வழங்கப்படும் டெண்டர் இன்று இறுதி செய்யப்பட இருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு பதில்அளிக்க கோரி டெண்டருக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. அதைத்தொடர்ந்து இதுகுறித்த விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து டெண்டர் நடவடிக்கையை செப்.,25 வரை நிறுத்தி வைக்க நீதிபதி ஆர். மகாதேவன் உத்தரவிட்டார்.
சத்துணவுக்கான முட்டை டெண்டர் விவரம்:
2017-18 ஆண்டுக்கு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 48 லட்சம் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்புதல் புள்ளிகளை கோரி தமிழக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 20-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.
அதில் மாநிலத்தில் உள்ள சிறு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக வெளி மாநில கோழி பண்ணைகள் பங்கு பெறுவதை தடை செய்தும், தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தனியார் கோழி பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி டெண்டருக்கு தடை விதித்து வெளி மாநில கோழி பண்ணைகளையும் அனுமதிக்கக் கோரி கரூரை சேர்ந்த வாசுகி கோழி பண்ணை உள்பட 4 கோழிப்பண்ணைகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.