சென்னை:

சென்னையில் அமைச்சர்கள் போட்டி போட்டு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தேனியிலிருந்து அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

அதிமுக அமைச்சர்கள் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி வரும் நிலையில் தேனியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவசரமாக சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்.

அதிமுகவின் இரு அணிகளும் நாளை இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் நாளை ஐஎன்எஸ் போர்க் கப்பலை பார்வையிடுவதற்காக 122 எம்எல்ஏ-க்களும் சென்னை திரும்பும்படியும் முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே அமைச்சர் தங்கமணி வீட்டில் தினகரனுக்கு எதிரான 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேபோல் தினகரனுக்கு ஆதரவான அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மூத்த அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக போர் கொடி உயர்த்தியதால் இன்று இரவுக்குள் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால் தேனியில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் அவசரமாக சென்னை திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.