டெல்லி: மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து  சென்னை உயர்நீதி மன்றம் கடந்த மாதம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி அடுத்த ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்தும் வகையில், 3 மாதத்திற்குள் மத்தியஅரசு முடிவு செய்ய வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தது.
ஆனால்,  மருத்துவபடிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு நடப்பாண்டே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகஅரசு சார்பில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், நீட் தேர்வு இந்தாண்டு இதுவரை நடக்கவில்லை. ஓபிசி மாணாக்கர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்தாண்டே வழங்க முடியுமா என்பது குறித்து மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

ந்தியாவைப் பொருத்தவரையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இருவரும் ஓபிசி என்ற வகைக்குள் வந்துவிடுவார்கள். ஆனால்,  தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஓபிசி என்பது பிசி, எம்பிசி உள்ளிட்ட பிரிவினருக்கான மொத்த இட ஒதுக்கீடு சலுகை ஆகும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஓபிசி என்பது பிசி மற்றும் எம்பிசியாக பிரித்து தனித்தனியாக குறிப்பிட்ட சதவீதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மருத்துவப் படிப்புக்கு இளங்கலை படிப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடும், மருத்துவ முதுகலை படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடும் மாநில அரசால் ஒதுக்கப்பட்டு வருகிறது. இதன்படி முதுகலைப் படிப்பில் 945 இடங்களும், இளங்கலை மருத்துவப் படிப்பில் 400க்கும் மேற்பட்ட இடங்கள் தமிழகத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஓபிசிக்கு எவ்வளவு பிற்படுத்தபட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் விதிப்படி 27 சதவீத இடங்களை வழங்கலாம். அப்படி வழங்குவதால் மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேலே போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மத்திய அரசு தற்போது மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்.சி. – 15, எஸ்.டி.-7.5, ஓ.பி.சி. – 27, இ.டபிள்யூ.சி. – 10 ஆக மொத்தம் 59.5 சதவீத இட ஒதுக்கீட்டினை அமலாக்கி வருகிறது. ஆனால்,  மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் ஓ.பி.சி.க்கு இட ஒதுக்கீடு வழங்கும் போது மத்திய அரசு ஏற்க மறுத்து வருகிறது. இது தொடர்பாக  கடந்த  2006-ம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம் மாநிலங்களின் உரிமையை பறிப்பதாக இருந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.