வாழப்பாடி ராமமூர்த்தியின் மறைவு நாள் (27-10-2020) இன்று.

ராஜுவ் படுகொலைப் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் பொதுக்கூட்டம், டி.ஆர்.கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை, டில்லியில் வர்மா,ஜெயின் கமிஷன்களின் விசாரணை ஆகிய செய்திகளை முழுமையாக எழுதிய ஒரே செய்தியாளன் இந்தியாவிலேயே அடியேன் மட்டுமே. படுகொலைக் களத்தில் நடந்தவை எனக்கு நினைவில் உள்ளன.

சில மேடைகளில் வாழப்பாடி குறித்து அவதூறு., ராஜுவ் படுகொலைச் சதியில் வாழப்பாடிக்கும் பங்காம். “படுகொலைப் போது மாநிலக் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ஏன் அருகே இல்லை” என்பது குற்றச்சாட்டு.
நேரில் கண்டவன் என்ற முறையில் அதை நான் அறிவேன்.
விழா தொடங்க இரண்டு மணி நேரத்துக்கு முன்பே நான் விழா மேடை அருகே சென்றுவிட்டேன்.
ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட மேடை அருகே வந்தபோது அவருடன் வாழப்பாடியும் வந்தார்.

அப்போது ராஜீவ் காந்தியைத் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். அவர்களின் அன்பில் திளைத்துப்போன ராஜீவ்காந்தி, தள்ளி நின்ற வாழப்பாடி ராமமூர்த்தியை அருகில் அழைத்தார்.

” நான் மேடைக்கு வருவதற்கு முன்னதாகவே நீங்கள் மேடைக்குச் செல்லுங்கள். வேட்பாளர்களை எல்லாம் சீராக நிறுத்தி வைத்துவிடுங்கள். அவர்களை அறிமுகப்படுத்தி நான் பேச வேண்டும்.” என இந்த தகவல்களை அவர் தெரிவித்தார்.

பின் தட்டிக்கொடுத்து வாழப்பாடியை அனுப்பிவிட்டார். அதனையடுத்து வாழப்பாடி ராமமூர்த்தியும் மேடை மேல் வந்தார். அங்கே நின்றிருந்த வேட்பாளர்களை எல்லாம் வரிசையாக நிறுத்தி வைத்தார்.

“ஒவ்வொரு வேட்பாளரின் பெயரை ராஜீவ்காந்தி உச்சரிக்கும் பொழுதும் அந்த வேட்பாளர் மட்டும் மேடைக்கு முன்னால் வந்து ராஜீவ் காந்தி அருகில் நிற்க வேண்டும். மேடைக்கு முன்னால் இருக்கின்ற பொதுமக்களைப் பார்த்து வணங்க வேண்டும்.” என்றெல்லாம் ஒவ்வொரு வேட்பாளரிடமும் சென்று அவர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் வாழப்பாடி.அந்த விளக்கங்களை முழுமையாக அவர் சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மேடை அருகே கீழே ராஜீவ்காந்தி, வரிசையாக நின்றிருந்த வருகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது தான் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
அப்போது பத்திரிகையாளர்களின் பகுதி அருகில் வெடிகுண்டுப்பெண் தணுவின் துண்டிக்கப்பட்ட தலை பறந்து வந்து விழுந்தது.

பத்திரிகையாளர் இடத்தில் அமர்ந்தவாறு நான் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆகவே வாழப்பாடி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை என்பதுதான் எனது விழி பார்வைக் கருத்து.

முதுபெரும் பத்திரிகையாளர் நாத்திகம் பாலனின் இருதயநோய் குறித்து நானும் பிடிஐ ராமசாமியும் வாழப்பாடியிடம் தெரிவித்தோம். அவரின் நேரடி பார்வையில் சிலரின் உதவிகளுடன் அப்பல்லோ மருத்துவமனையில் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

வாழப்பாடியை பாலன் செல்லமாக ‘கூரா’ என்றே கூப்பிடுவது வழக்கம். வாழப்பாடி இறந்தபோது அஞ்சலி செலுத்த பாலன் வந்தார்.

“கூரா….என் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்து விட்டு நீங்கள் போய்ச் சேர்ந்துவிட்டீர்களே!” என்று கதறியக் கோலம் அடிக்கடி என் நெஞ்சில் நிழலாடுகிறது.

நூருல்லா ஆர். ஊடகன்
27-10-2020. 9655578786