சென்னை

சுமார் 11 வருடத்துக்கு முன்பு விபத்தில் சிக்கி இறக்கும் முன்பு உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட ஹிதேந்திரனை அவர் தந்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்துள்ளார்.

                                               குடும்பத்தினருடன் ஹிதேந்திரன்

சென்னை அருகில் உள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஹிதேந்திரன் என்ற 15 வயது பள்ளி மாணவன், கடந்த 2008-ம் வருடம் செப்டம்பர் மாதத்தில்  விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தான்.  ஹிதேந்திரனின்  பெற்றோர் மருத்துவர்கள் என்பதால் அவர்கள் தங்கள் மகனின் இதயம், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகளை தானம் செய்தனர்.   இந்நிகழ்வு அந்த நேரத்தில் நாடு முழுவதும் உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.   ஹிதேந்தின் மரணம் அடைந்தாலும் அவனால் உயிர்பிழைத்தவர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

அத்துடன் ஹிதேந்திரனின் பெற்றோர் தங்கள் மகனுடைய பெயரில் அறக்கட்டளை நிறுவி, உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள். பள்ளிக் கல்வித்துறையின் ஆறாம் வகுப்பு தமிழ்ப்புத்தகத்தில் ஹிதேந்திரனின் உடலுறுப்பு தானம் பற்றிய பாடம் இடம்  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மறைந்த ஹிதேந்திரனின் தந்தை அசோகன் சுப்ரமணியன் இது குறித்து சமூக வலைதளத்தில் `இதே நாளில் பதினோரு வருடங்களுக்கு முன்னால், என் மகன் ஹிதேந்திரன் அந்த விபத்தைச் சந்தித்தான். அதன் பிறகு இரு தினங்களில் அவன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக  மருத்துவர்கள் மருத்துவரகL தெரிவித்தனர்.  அன்பு இளைஞர்களே,  நீங்கள் கவனமாக வாகனங்களை ஓட்டுங்கள். இவ்வுலகுக்கு எல்லோரையும்போல நீங்களும் ஒருவராக இருக்கலாம். அதே வேளையில், உங்கள் பெற்றோருக்கு நீங்கள்தான் உலகமே ஆவீர்கள்.

எனது  மகன் இறந்தாலும், அவனுடைய உறுப்புகள் மூலம் இன்றைக்கும் மற்றவர்கள் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதைப் போல் அவர்கள் மூலம் என் மகனும் வாழ்ந்துகொண்டிருக்கிறான். என் மகன் மரணம் வழியாக, உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டது தான் எங்களுக்கு ஆறுதல்’ என தனது இதயத்தை உருக்கும் பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் “கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஹித்து ஞாபகம் நிறைய வந்தது . ஹித்து உயிருடன் இருந்தவரைக்கும் அவனும் அவன் தம்பியும் சேர்ந்து வீட்டை அலங்காரம் செய்வது, பிள்ளையார் சிலை வாங்கி வந்து அலங்காரம் செய்வது என எங்கள் வீடே கலகலப்பா இருக்கும்.  இப்போது அப்படி ஒரு கொண்டாட்டமே எங்கள் வீட்டில் கிடையாது. எங்கள் மகன் ஹித்து எங்களைவிட்டுப் போனதுக்குப்பிறகு இந்தப் பதினோரு வருடங்களாக எந்தப் பண்டிகையும் எங்கள் வீட்டில் கொண்டாடுவதில்லை’

எங்கள் மகன் ஹிதேந்திரனின்  விபத்து நடந்த இடத்துக்குப் பக்கத்தில் ஒரு முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது  நான். அந்தக் கோயிலைக் கடக்கும் பொது அவரை `ஹித்து முருகா’ என அழைப்பேன்.  ஹிந்தேந்திரன் கல்லீரலைக் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக்  கொடுத்தோம். அவருக்கு ஆங்கிலம்  தெரியாது. எங்களுக்கோ மலையாளம் தெரியாது. அதனால் அவர்களைச் சந்தித்த போது எங்களால் அதிகம் பேச முடியவில்லை.

இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த தகவல் எங்கள் மனதுக்கு இதமா இருந்தது.  ஹிதேந்திரனின் உறுப்புகளை வைத்துக்கள் மற்றவர்களுடனும் எவ்வித தொடர்பும் கிடையாது.   அவர்கள் யாருடனும் நாங்கள் பேசுவதில்லை.  தற்போது உடலுறுப்பு தானம் தொடர்பா நிறைய நெகட்டிவான செய்திகளைப் படிக்கிறேன். அப்படியெல்லாம் நடக்காம இருக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.