டில்லி,

கி புயலால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ. 561 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே தென் மேற்கு வங்கக்கடலில் உருவான ஒகி புயல் அம்மாவட்டத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த புயலின் கோர தாண்டவம் காரணமாக  லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. ரப்பர், வாழை,பலா உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.

அது மட்டுமல்லாமல் கடலுக்கு மீன் பிடிக்கச்  சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்களும் மாயமாகினர். அவர்களில் 500க்கும் மேற்பட்டோர் இன்னும் வீடு திரும்பவில்லை.

அதேபோன்று கேரள மாநிலமும்  ஒகி புயலால் கடுமையான சேதத்தை சந்தித்தது. அங்கும் 56 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் பலர் மாயமாகியுள்ளனர்.

இதையடுத்த அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

தமிழகத்திலும் ஓகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட மக்களும் ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால், தமிழகம் மற்றும் கேரள கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள மத்திய அரசு, தமிழகத்திககு 561 கோடி ரூபாயும், கேரளாவுக்கு 153 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.