பரேலி

பரேலியை சேர்ந்த ஒருவர்  ரெயில் பயணத்தில் அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக தனது முகநூல் பக்கத்தில் பதிந்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது

பரேலியை சேர்ந்தவர் நீலப் கணிக்கர்.  இவர் தனது குடும்பத்தினருடன் துலியாஜான் ஸ்டேஷனில் இருந்து திமாபூர் வரை நியூ தின்சுக்யா ராஜெந்திர நகர் பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.  அப்போது இரண்டு முட்டை பிரியாணி ஓடும் ரெயிலில் வாங்கினார். ஒரு பிரியாணி ரூ 80 வீதம் அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளார்கள்.  அவருக்கு விலையில் சந்தேகம் வந்து பாண்ட்ரீ கார் சென்று விலைப் பட்டியலை பார்த்தார்.  அதில் விலை ரூ 63 என இருந்தது.

கணிக்கர் தனக்கு பிரியாணி அளித்த ஊழியரை தேடிப் பிடித்து அதிகம் பணம் வாங்கியதைப் பற்றிக் கேட்டு அதனை வீடியோ ரிகார்ட் செய்துள்ளார்.  அது மட்டும் இன்றி இது பற்றி பாண்ட்ரி காரில் உள்ள ஊழியர்களிடம் விசாரித்து அதையும் ரிகார்ட் செய்துள்ளார்.

பாண்ட்ரீ ஊழியர்கள் ரிகார்ட் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததோடு இந்த வீடியோ வை ரெயில்வே அமைச்சகத்துக்கு அனுப்ப போவதாகவும் சொல்லி இருக்கிறார்.  பாண்ட்ரி கார் ஊழியர்கள் தாங்கள் விலைப்பட்டியலை சரியாக கவனிக்காததால் இந்த தவறு ஏற்பட்டதாகக் கூறி அதிகப் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

இதை பற்றி அவர் தனது முகநூலில் எழுதியது வைரலாக பரவியது.  இது வரை அந்த பதிவு 8000 பேரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஃபிப்ரவரி மாதம் இதே போல நடந்த ஒரு நிகழ்வு முகநூலில் பதிவு செய்யப்பட்டது தெரிந்ததே.

தொடர்கதையாக வரும் இது போல நிகழ்வுகளை நிறுத்த ரெயில்வே நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் என்பதே அனைத்துப் பயணிகளின் அவா.