பெங்களூரு

குதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 16  பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும், 3 மஜத உறுப்பினர்களும் கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.  இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியை இழந்தது.    கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்ததாக இந்த 17 உறுப்பினர்களும் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.  தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் இந்த 17 உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.    அவர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடத் தடை இல்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.  இந்த தீர்ப்பு அந்த உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி பாஜகவுக்கும் ஓரளவு திருப்தியை அளித்துள்ளது எனக் கூறலாம்.

அடுத்து வரும் தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிடத் தயாரான அந்த 17 உறுப்பினர்களில் 16 பேர்  இன்று பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் ரமேஷ் ஜர்கிகோலி, விஸ்வநாத், பிரதாப்கவுடா பாட்டில், சிவராம் ஹெப்பர், பிசி பாடில், மகேஷ் குமதல்லி, ஆனந்த் சிங், சுதாகர், பைரதி பசவராஜ், சோமசேகர, முனிரத்னா, கோபால்நாத், நாராயண கவுடா, சங்கர், ஸ்ரீமந்த் பாடில், நாகராஜ் ஆகியோர் ஆவார்கள்.

இதில் காங்கிரஸைச் சேர்ந்த ரோஷன் பைக் காணப்படவில்லை   அவர் கட்சியில் இணைந்தாரா என்பது குறித்து பாஜக எதுவும் தெரிவிக்கவில்லை.   ரோஷன் 7 முறை சட்டப்பேர்வை உறுஇனராக இருந்துள்ளார்  காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்  பெற்றிருந்தார்   சிவாஜி நகர் தொகுதி உறுப்பினரான இவர் கடந்த ஜூலை மாதம் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.  இவர் இந்த வருடத் தொடக்கத்தில் நடந்த ஐ எம் ஏ மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.

இந்த 16 பேரை கட்சியில் சேர்த்ததற்கு சில பாஜக தலைவர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.  பாஜக மக்களவை உறுப்பினரான பச்சே கவுடாவின் மகன் சரத் பச்சே கவுடா தற்போது பாஜகவில் இணைந்தவர்களில் ஒருவரான நாகராஜ் பாஜக சார்பில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து சுயேச்சை ஆகத் தாம் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவில் போட்டியிட்ட சரத் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாகராஜ் இடம் தோல்வி அடைந்தார்.    சரத் சுயேச்சையாகப் போட்டியிட்டால் தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள் முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்

அதைப் போல் அதானி தொகுதியிலும் பாஜகவுக்கு கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  கட்னத 2018 ஆம் வருட சட்டப்பேரவை தேர்தலில் தற்போது துணை முதல்வராக உள்ள லட்சுமண் சங்கப்பா சாவடி இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மகேஷ் குமதல்லியிடம் தோல்வி அடைந்தார்.  மகேஷ் குமதல்லி தகுதி நீக்கம் செய்யப்பட்டு தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

சட்டப் பேரவை உறுப்பினராக இல்லாமல் துணை முதல்வராகி உள்ள சாவடி இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளார்.  அதே வேளையில் குமதல்லியின் ஆதரவைத் தொடர அவரும் பாஜக சார்பில் போட்டியிட வேண்டிய அவசியமும் உள்ளது.   இந்த குழப்பம் குறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.