புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழுந்துள்ளதால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து வரும் 22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பொறுப்பு ஆளுநரான தமிழிசை சௌந்தர ராஜன் உத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில், புதுச்சேரியில் ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகிய நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ இன்று ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏவான லட்சுமி நாராயணன், தமது ராஜினாமா கடிதத்தை பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினார். இதையடுத்து, புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 ஆக குறைந்துள்ளது.