சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ஜூன் மாதம் அமல்படுத்தப்படுவதாக கூறிய நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது அக்டோபர் 1ந்தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அங்கு ரேசன் பொருட்களை வாங்கும் வகையில், ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள யாரும்  எந்தவொரு மாநிலத்தில் உள்ள எந்த நியாயவிலைக் கடையிலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் காமராஜ்,  “ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்கப்படும், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநில  விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அமல்படுத்தாது. அதனால் தான் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்றாமல் பாதுகாக்கும் வகையில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் ஏற்கெனவே தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள திட்டம். இதன் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பொருளை எங்குவேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்ற நிலை நடைமுறையில் உள்ளது.

மேலும், வேளாண் பொருட்களான உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை வைத்திருந்து சற்று கூடுதல் விலை கிடைக்கும்போது விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்பதற்கான மசோதாவும் நிறைவேறியுள்ளது. அதேநேரத்தில் விவசாயிகளுக்கு எதிராக வணிகர்கள் விலை உயர்வை ஏற்படுத்தினால் அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.