ஜெய்ப்பூர்

ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர் எல் பி) வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் எதிர்க்கட்சியினரை மட்டுமின்றி பாஜகவின் கூட்டணி கட்சியினரையும் கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.  இந்த சட்டம் தீர்மான வடிவில் நிறைவேற்றப்பட்ட போதே பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் கூட்டணியில் இருந்து விலகியது.

அந்த கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இருந்த ஹர்சிம்ரத் க்வுர் பாதல் அமைச்சரவையில் இருந்து விலகினார்.  தற்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி  டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஆனால் பாஜக அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் உள்ளது.

இதையொட்டி பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர் எல் பி) கூட்டணியில் இருந்து விலகி உள்ளது.  அக்கட்சியின் தலைவர் ஹனுமன் பெனிவால் ஜெய்ப்பூரில் தமது கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஹனுமன் பெனிவால், “எனது கொரோனா தாக்குதல் காரணமாக என்னால் நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியவில்லை.   நான் அவையில் இல்லாத நேரத்தில் இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.   நான் அங்கு இருந்திருந்தால் அவர்களைக் கிழித்து வீசி இருப்பேன்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத பாஜகவுடன் கூட்டணியில் தொடர எங்களுக்கு விருப்பம் இல்லை.  எனவே பாஜக கூட்டணியில் இருந்து எங்கள் ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி விலகுகிறது.   இந்த கூட்டணியுடன் ஃபெவிகால் போட்டு எங்கள் கட்சியை ஒட்ட வைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.