நியூயார்க்: ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு, முதல்கட்ட தடுப்பூசி மட்டுமே போதுமானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து ஏற்கனவே குணமடைந்தவர்களின் உடலில், முதற்கட்ட தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் அதிகபட்ச எதிர்ப்பாற்றல் நிலை, இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் ஏற்படுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன்மூலம், அத்தகையவர்களுக்கு, இரண்டாம் கட்ட தடுப்பூசி தேவையில்லை என்ற கருத்து எட்டப்பட்டுள்ளது.

அதேசமயம், பொதுவான நிலையில், நோயெதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களுக்கு, இரண்டுகட்ட தடுப்பூசிகளும் நிச்சயம் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம்தான், நோயெதிர்ப்பு திறன் வலுப்பட்டு, ‘பி’ செல் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், உருமாறிய வைரஸ் தாக்குதலை எளிதாக எதிர்கொள்ளவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.