சென்னை,

திமுகவின் ஓராண்டு ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே தழுவியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதை தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்தது. இதற்கிடையில் ஜெயலலிதா உடல்நலமில்லாமல் மரணம் அடைந்ததால் ஓபிஎஸ் தற்காலிக முதல்வராக பதவி ஏற்றார்.

பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

மூன்று முதல்வர்களை கொண்டு அதிமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை சென்று பத்திரிகை களில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அதிமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு கண்டுள்ள தோல்வியை மூடி மறைக்க, நாளேடுகளில் பகட்டான விளம்பரங்களைக் கொடுத்துள்ளது.

உதாரணமாக, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பல வருடங்களாக சுமார் 7 ஆயிரம் கோடி பாக்கிவைத்துவிட்டு, தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பிறகு அதில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தியதைச் சாதனையாக விளம்பரப்படுத்தியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

செல்வி ஜெயலலிதாவின் உடல்நிலை, பிறகு அவரது மரணம், அதன் பிறகு அக்கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப்போட்டி ஆகியவற்றால் பெரும்பாலான காலம் செயல்படாத அரசாகவே இருந்துள்ளது.

வறட்சி, விவசாயம் பொய்த்துப் போனது ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டோ, அதிர்ச்சியாலோ இறந்து கொண்டிருக்கும்போது விவசாயிகள் யாரும் வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது. தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்து அதிமுகவின் அணுகுமுறைக்கு இது ஒரு சோறு.

விவசாய வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையிலிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் அளிப்பதற்கு, சட்டத்தை காட்டி மறுத்த அரசாங்கம்,  கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் போது,

கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கே  வேலை அளிக்க மறுத்ததோடு, வேலை செய்த நாட்களுக்கான கூலியையும், 5 மாதங்களுக்கு மேல் கொடுக்காமல் துயரப்படுத்திக் கொண்டிருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பொதுவிநியோக முறையையும் சீரழித்திருக்கிறது இந்த அரசு.

ஏறத்தாழ ஏழு மாதங்களாக உளுந்தம்பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை அடியோடு நிறுத்தப்பட்டிருக்கின்றன. அரிசிக்கு பதிலாக கோதுமையை திணிக்கும் நிலை உள்ளது. ஆதாரைக்காட்டி 13 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன்பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது.

கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மாநிலத்தின் பல பகுதிகளில் ஒரு குடம் தண்ணீர் ரூ. 5 – 10 விலைக்கு விற்கப்படுகிறது.  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரையும் சேர்த்து ஒரு கோடி பேருக்கு வேலை இல்லை. உலக முதலீட்டாளர் மாநாடு, தொலைநோக்கு திட்டம் 2023 என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்தாலும் சில 100 பேருக்காவது வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய புதிய தொழிற்சாலைகள் எதுவும் இந்த காலத்தில் துவங்கப்படவில்லை.

மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறை தொடர்கின்றன. கூலிப்படையினரால் கொலைச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்டு நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் மக்கள் மீது காவல்துறையை மாநில அரசு ஏவி விடுகிறது.

ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

சென்னை பள்ளிக்கரணை, மதுரை காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வரும் பெண்கள் மீது காவல்துறை அத்துமீறியும், அநாகரிகமாகவும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள 3000த்திற்கு மேற்பட்ட கடைகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் திறப்பதன் மூலம் படிப்படியான மதுவிலக்கு என்ற தனது கொள்கைகளிலிருந்து அதிமுக அரசு விலகிச் செல்கிறது.

ஊழல், முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் அரசின் எல்லாத்துறைகளிலும் கோலோச்சுகிறது.

பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் முதல் கீழ்நிலை பணியாளர்  வரை அரசுப்பணிகளில் ஒவ்வொரு நியமனத்திற்கும் விலை தீர்மானிக்கப்பட்டு கையூட்டு கொடுத்தால்தான் வேலை என்பது விதியாகிவிட்டது.

கிரானைட் கொள்ளை சம்பந்தமாக சகாயம் ஐ.ஏ.எஸ். நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆண்டுகளில்   ரூ. 1 லட்சத்து 6 ஆயிரம் கோடி அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று தாதுமணல் கொள்ளை சம்பந்தமாக ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ். அளித்த அறிக்கையை அதிமுக அரசு இன்று வரையில் சட்டமன்றத்திலும் வைக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆற்று மணல் கொள்ளை தங்குதடையின்றி தொடர்கிறது.

தமிழகத்தின் நிர்வாகம் எத்தனை சீர்கெட்ட நிலையில் இருக்கிறது என்பதற்கு போக்குவரத் துத்துறை  நல்ல உதாரணம். ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை என்பதோடு தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் கட்டவேண்டிய தொகையை கூட போக்குவரத்து நிர்வாகங்கள் அரசின் வழிகாட்டுதலின் படியே, அன்றாடச் செலவுகளுக்கு கபளீகரம் செய்தன.

பள்ளிக்கல்வித்துறையில் வரவேற்கத்தக்க சில சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், உயர்கல்வி மற்றும் பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் தனியார் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவற்றில் எல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளாமல் காலம் கடத்துகிறது.

ஆளுங்கட்சியில் ஏற்பட்ட பிளவை மத்தியில் ஆளும் பாஜக பயன்படுத்தி அச்சுறுத்தி இரண்டு கோஷ்டிகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச்செயலாளர், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வீட்டில் நடந்த சோதனை, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததற்காக தினகரன் மீது வழக்கு, சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் 300 கோடி ரூபாய் அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்தாக இருந்த பதிவு, ஆகிய ஊழல் முறைகேடுகள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மத்திய பாஜக இந்த இரண்டு கோஷ்டிகளையும் மிரட்டி தனது கைக்குள் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளும் மாநிலத்தின் மக்களின் நலன்களை காவு கொடுத்து விட்டு பாஜகவோடு நெருக்கமாக செல்வதற்கு போட்டி போட்டு வருகின்றனர். நீட் தேர்வு, இந்தி திணிப்பு, உதய் மின்திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் உணவுப்பொருள் ஒதுக்கீட்டை குறைப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், வார்தா புயல் – வறட்சி நிவாரணத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பது போன்ற மத்திய அரசின் தமிழக மக்களின் நலனுக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பதிலாக இரண்டு கோஷ்டிகளும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர்.

தமிழக மக்கள் தாங்கொணாத் துயரங்களில் தவித்துக் கொண்டிருக்கும்போது, அதிமுகவின் இரு அணிகளும், ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கவும், அரசு நிர்வாகத்தை ஊழல் சாம்ராஜ்யமாக நடத்துவதற்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளதுதான் கடந்த ஓராண்டில் நாம் கண்டுவருவது.

மொத்தத்தில் அதிமுகவின் ஓராண்டு ஆட்சி மாநில மக்களுக்கு வேதனையிலும் வேதனையே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.