டெல்லி: மத்திய அரசின் 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவை மீறினால் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கின.

ஆனாலு இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 பேரை தாண்டி கடந்துள்ளது. இந் நிலையில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதன்படி நாட்டு மக்கள் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். ஒவ்வொரு இந்தியரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த 21 நாட்களை மக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந் நிலையில், மத்திய அரசின் 21 நாட்களுக்கான ஊரடங்கு உத்தரவை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது