திருச்சி: யுஜி, பிஜி இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் , ஆன்லைன் தேர்வுகள் எழுதுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் இயல்பு நிலைக்கு வந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டே உள்ளது. இதனால் பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதியாண்டுத் தேர்வுகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், திருவாரூர்  மத்திய பல்கலைக்கழகம் இறுதியாண்டு தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  இறுதியாண்டு தேர்வு அந்தந்த துறைகளால் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், சில நாட்களில் தேர்வு நடத்தப்படும் முறைகள் குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்பட்ட உள்ளது.

அதன்படி,  இளங்கலை (Under Graduate ) மற்றும் முதுகலை (Post Graduate) மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த இருப்பதாகவும்,  இறுதி ஆண்டு மாணவர்கள் (UG and PG Students) தங்கள் பட்டங்களைப் பெற வேண்டும் என்றும், தொழில் அல்லது உயர் கல்வியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என மத்திய பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் (Online Exam) தேர்வுகள் எழுதுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்கள் இயல்பு நிலைக்கு வந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் ஏ ரகுபதி தெரிவித்துள்ளார்.