புதுடெல்லி: சில குறிப்பிட்ட துறைகளுக்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வின் காரணமாக, மொபைல், தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஆன்லைன் முறையில் வாங்கலாம் என்று மத்திய அரசு வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

அதாவது, அப்பொருட்களை அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் சேவை நிறுவனங்களைப் பயன்படுத்தி வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ள துறைகளில், எலக்ட்ரானிக் துறையும் உள்ளது. இதன்படி, மொபைல், தொலைக்காட்சி, லேப்டாப் மற்றும் குளிர்சாதனப் பெட்டி போன்ற மின்னணுப் பொருட்களை, அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் சேவை நிறுவனங்கள் வாயிலாக, ஏப்ரல் 20ம் தேதி முதல் வாங்கலாம்.

ஆனாலும், ஆன்லைன் சேவை நிறுவனங்களின் டெலிவரி வேன்கள் இயங்குவதற்கு அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும். தற்போது அத்தியாவசியமான சேவைகளுக்கான வாகனங்கள் இயங்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சேவை நிறுவனங்களின் வேன்கள் இயங்குவதற்கு அனுமதி கிடைத்தால், ஆர்டர் செய்த பொருட்கள், தாமதமின்றி மக்களின் வீடு தேடி வரும் என்று கூறப்பட்டுள்ளது.